Skip to main content

கண்ணம்மா 04


எவ்வாறோ கஸ்டப்பட்டு ஐந்தாறு வீடுகளில் நாள்தோறும் சட்டி பானைகளை கழுவவும் உணவு சமைக்கவும் அனுமதிக்கப்பட்டாள். வேலைக்கேற்ப கூலி கிடைப்பதில்லை. நியாயம் கேட்டால் வேலையை விட்டு தூக்கிவிடுவார்களோ என அஞ்சி கண்ணம்மாவும் அடக்கி வாசித்தாள். வேலை செய்யும் போது ஏற்பட்ட பல்வேறு இன்னல்களையும் தாங்கிக்கொண்டு தனது சொந்த அக புறப்பற்றுக்களை களைந்து தனது அன்புத்தம்பிக்காக தனது தம்பியின் ஒளிமயமானதோர் எதிர்காலத்திற்காக தன்னை வருத்தி கடின உழைப்பினில் மூழ்கினாள்.
அன்று வெள்ளிக்கிழமை. தம்பியை பாடசாலைக்கு அனுப்பியதன் பின் கோயிலுக்கு சென்று இறைவனை வணங்கி அதன்பின்னர் சின்னம்மா வீட்டிற்கு வேலை செய்யவென சென்றிருந்தாள்.

'"ஏண்டி மாடு கழுத உனக்கு நேரங்காலத்தோட வரத்தெரியாதாடி? வீட்டுல என்னடி செய்யிறாய்? வா வந்து உடன சட்டி பானய கழுவு!!!எல்லாம் நாறுது!!!வாடி சொல்லச்சொல்ல அங்கேயே குத்துக்கல்லாட்டா நிக்குறாய்!!!". 

 என லாவா சீறும் எரிமலை என சீறித்தள்ளினாள். சின்னம்மா பேச்சை எல்லாம் வாங்கிக்கொண்டு தனது பெற்றோரை மனதில் எண்ணி கண்ணீர் வடித்துக்கொண்டு வேலையைச் செய்யலானாள்.

"குமரேசன் மட்டும் பெரிய படிப்பு படிச்சு காருல வரட்டும், இவியளுக்கு அப்ப நான் ஆர் எண்டு காட்டுறன். பிறவு இவியள் எல்லாம் என் பின்னால தான்"

என தனக்குத்தானே கூறிக்கொண்டு வேலை செய்தாள்.
இவ்வாறு பல வருடங்களாக தனது வாழ்க்கைப்பயணத்தை பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் மேற்கொண்டாள். தன் வாழ்க்கைச் செலவிற்கு ஒரு சிறிய அளவு பணத்தை வைத்துக்கொண்டு மீதியைத்தன் தம்பியின் படிப்பிற்கு பயன்படுத்தினாள்.
இப்போது குட்டிக்குமரேசன் பல்கலைக்கழகம் செல்லும் வயதை அடைந்துவிட்டான். கண்ணம்மா தான் நினைத்த மாதிரியே தனது தம்பியை ஒருவழியாக நல்லநிலைக்கு கொண்டுவரும் முயற்சியில் அரைவாசியை வென்றுவிட்டதென எண்ணி தனக்குள்ளேயே ஒரு சிறிய பூரிப்பு, பெருமிதம் போன்றவற்றை அவளது முகம் உள்ளங்கை நெல்லிக்கனி என தெட்டத்தெளிவாக காட்டியது.

ஞாயிற்றுக்கிழமை புலரிப்பொழுதில், குமரேசன் மனக்குழப்பத்துடன் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தான். இதைக்கண்ட கண்ணம்மா


" என்னடா தம்பி, கெம்பசுக்கு போவ காசு அப்புறம் படிப்புக்காசு...அதப்பற்றித்தான யோசிக்கிறாய்?"
என்று வினா வெழுப்ப

" எப்பிடிக்கா? எப்பிடி நான் கேக்கிறதுக்கு முன்னாடியே அச்சு அசலா அப்படியே சொல்லுறாய்? எப்பிடி உன்னால இப்பிடி எல்லாம் சொல்லமுடியுது?"..

" டேய் !! நீ என்ர புள்ளடா. உன்ர ஒவ்வொரு இதயத்துடிப்பும் என்ன சொல்லுதுண்டு எனக்குத்தெரியும். கவலப்படாத, இப்ப உன்ர வேற வேலயப்பாரு நாளைக்கு காலயில உன்ர கையில காசு இருக்கும்"
என்று கூறி தன் தமிபியை கை எடுத்து கன்னத்தில் அன்பினால் தடவி புண்பட்ட ஆன்மாவில் கூட ஒரு புன்னகையை வரவழைத்து ஒரு சிறிய மைளவல் புன்னகை புரிந்து அவ்விடத்தை விட்டு நீங்கினாள்.
நீங்கவும் உடன் தன் அக்காவை அழைத்த குமரேசன்

"அக்கா எனக்கு இப்ப கம்பஸ் படிப்பு ஒண்ணும் தேவ இல்ல... உன்ன இன்னமும் வேல செய்ய விட்டா நான் ஒரு மனுசனே இல்ல... நீ வேல செஞ்சது காணும் எனி என்ன வேலய செய்யவிடு....."

என்று தன் உள்ளத்தில் இருந்த குமுறல்களை எல்லாம் வெளித்தள்ளினான் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது......

கண்ணம்மாவுக்கு என்ன கூறுவதென்றே தெரியவில்லை. தன் தம்பியை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் சற்று தன் சிந்தனைக்கு வேலை கொடுத்துவிட்டு பின்னர் தன் தம்பியை கட்டியணைத்து பாசத்தால் ஆரத்தழுவி கண்களில் குற்றாலம் தெரிய,

”டேய் குமரேசா நீ இப்ப வேல செய்யவாடா நான் இப்புடி கஸ்ரப்பட்டனான்? நீ ஒரு டொக்டரா வரணும் டா..... அதுதான்டா எனக்கு விருப்பம். எப்படியோ இவ்வளவு காலம் ஔச்சிடடேன்.. இன்னும் கொஞ்சக்காலம் ஔச்சிட்டா நீபிறகு என்ன ஒழுங்காப்பாப்பாய் தானடா? ...”

என்று கூறி மீண்டும் தன் உதடுகளை அன்பினால் குமரேசனின் கன்னங்களில் பதித்துவிட்டு வீட்டினுள் சென்றாள்.

 கண்ணம்மா தொடரும்.......

Comments

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...