Skip to main content

தவறிழைத்த ஓர் தலைவி!!!



சற்றே பழக்கப்பட்ட இடம். மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம். மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம். சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம். நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு. மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது.

இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும்சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது. பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே..

பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்லவும் ஏமாற்றம் நிறைந்த அந்த வதனம் நினைவுகளையும் சற்று அசைபோடவே விழைகிறது.

அம்மா இல்லாததொரு தவிப்பையும் அவசியத்தையும் மெல்ல மெல்ல உணரத்தொடங்குகிறாள். தலைவியாய் அன்னை வழிநடத்தும் போதெல்லாம் வெகுளித்தனமாக செல்லம் நிறைந்தவளாக தலைமைப்பண்புகளை பெறத்தவறியவளாகவே வாழ்வின் பல கணங்களை கடந்து இருந்ததை நினைத்து இப்போதும் சற்றே நொடிந்தே போகிறது அந்த உள்ளம். வதன அசைவுகள் அழுகையை உரைத்தாலும் அங்கோ கண்ணீர் சற்று வற்றியே விட்டது. விழிகள் மாத்திரம் அதே செம்மையில்.

வேற்றவன் மீது கொண்டது காதலா அல்லது மோகமா என்றும் சற்றே எண்ணத்தோன்றுகிறது அவளுக்கு. கட்டுக்குலையாமல் ஒன்றித்த இயற்கையுடன் வாழ்ந்துவந்த இனத்தை விட்டு விலகுமளவிற்கு ஒரு காதல் வழி காட்டுமா என்ற கேள்வி பல தடவை அவள் மனதை ஆட்கொண்டும் அதற்கு சாதகமான விடையொன்றை அறிய இயலாதவளாய் இருப்பதுவே அவளுக்கு உரைத்திருக்கும் அவளின் தவறை.

சற்றே மாறுபட்ட உருவம், வேற்று மொழி. வசீகர தோற்றம். பொன்னிற மேனி என வேற்று சூழலில் இருந்து வந்தவன் மீது அறிவை மயக்கும் மோகத்தை வைத்து கடைசியில் அவனாலேயே ஏமாற்றப்பட்டதையும் தன் இனத்தின் அடையாளம் குலையுமளவிற்கு தன் மோகம் இருந்துவிட்டமையையும் எண்ணி நொறுங்கி போக விரும்புகிறது அவள் உள்ளம். நிகழ்வனைத்தும் தன் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் சகல தவறிற்கும் காரணமாகி இன்று சிறியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் நிலை கூட தன்னில் இல்லாத்தையிட்டு சற்றே கேவலமான எண்ணம் அவளின் மீது அவளிற்கே தோன்றுகிறது. கூட்டத்தலைவி என்ற ஒரு அடையாளம் இப்போது வெகுவாகவே மாறியிருக்கிறது. கூட்டமொன்றின் அவமானச்சின்னமாக , ஒரு தோல்வியின் சின்னமாக

முத்தோர்கள் இளையோர்கள் என்று எண்ணிலடங்கோர் பலியுண்டும் கூட்டத்தை வழி நடத்தும் குருக்கள் மரியாதைக்குரியோர் என்று பலர் அறிவுரைத்தும் மோகம் என்ற மாயையினால் உள்வாங்கப்பட்டு அனைத்தையும் நிராகரித்து ஈற்றில் தனது அடையாளத்தை கலாசாரத்தை எல்லாம் இழந்தவளாய் தன் இனத்திற்கே மாபெரும் தவறினை செய்துவிட்டவளாய் இன்று உணர்கிறாள். அன்றோ சிரிப்பதற்கும் சிலர். அழுவதற்கும் சிலர். விழிநீர் துடைக்க சிலர். இன்னல்கள் அகற்ற சிலர் என்று ஒரு கூட்டமே இவளுக்காய் காத்திருக்க இன்றோ நடக்கிறாள் தன்னந்தனியே இரு பாலகர்கள் மாத்திரம் உடன் வர. களையிழந்த காட்டின் வழியே நடந்து செல்கிறது அந்த பாதங்கள். ஆங்காங்கே தறிக்கப்பட்ட மரங்களின் அடையாளங்களையும் அவதானிக்கத்தவறவில்லை அவ்விழிகள். இளமையில் காதை மயக்கும் குயிலோசைகளும் விலங்குகளின் ஒலிகளும் சற்றே மாறி தன்னினப்பெண்களின் அலறல் சத்தமும் மரண ஓலமும் வட நாட்டவர்களின் வெ(ற்)றிச்சிரிப்புகளும் தான் இன்று அவளது செவிகளை மீண்டும் மீண்டும் பதம் பார்த்தவண்ணமே இருந்தன. வற்றிய விழியிலும் மெல்ல மெல்ல கண்ணீர் சுரக்க ஆரம்பிக்கிறது.

தெளிந்த சிந்தையும் அவளுக்கு காலம் கடந்தே கிடைக்கிறது. மாபெரும் தவறிற்கு காரணமாகி விட்டதை இப்போது வெகுவாகவே உணர்கிறாள் அவள். தன்னை நம்பியிருக்கும் தன் பிள்ளைகளையாவது கரை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் துளிர்விடுகிறது. சற்றே இறுக்கமாக பற்றுகிறாள் இரு கைகளையும். இரு கைகளுள்ளும் இருக்கிறது இவளது எதிர்கால சந்ததி.

கால்களும் பயணிக்கிறது. தூரத்திலே ஒரு குடியிருப்பை விழிகள் காண சற்றே தயக்கத்துடன் கால்கள் நகர்ந்து சென்று குடியிருப்பை அணுக கூட்டமாய் குவிகிறது அவளினத்துறவுகளும் உடற்கூட்டை சிதறடிக்கும் கற்களும்

Comments

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...