Skip to main content

இரையாகும் கனவுகள்...



அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள். மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன. ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம். வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன. சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன.

தூரத்திலே ஒரு குடிசையில், பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது. கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம் பொருந்திய சூழலுக்கு சாட்சியும் ஆனது.

செண்பகம்வெற்று நெற்றி, வெண்ணிற புடவை, முதிர்ந்த பார்வை, நிதான பாவனை கொண்ட பெண்; மூன்று ஆண்பிள்ளைகள் ஒரு பெண் பிள்ளையின் தாய்; தலைவனையிழந்த ஓர் இல்லத்தரசி.

ஒரு கையில் பூசைமணியும் மறுகையில் சாம்பிராணிப்புகை தட்டுமாய் தோத்திரங்களை பாடியவண்ணம் குடிசையின் ஒவ்வொரு அறையையும் திறந்து சாம்பிராணிப்புகையை பரவ விட்ட வண்ணம் இருந்தார்.

படலையில் காகம் ஒன்று கரைவதை சற்றே சந்தேகத்துடன் பார்த்து
அப்பிடி யார் இன்று வரப்போவினம்?” மனதினுள் எண்ணியவண்ணமே
இரண்டாவது அறையை திறந்து உட்செல்ல மண்தரையில் அண்ணாந்து கைகால்களை விரித்து உறக்கத்தில் ஆழ்ந்திருந்த மதன், மஞ்சுளாவிற்கு அம்மாவின் கையிலிருந்த மணியெழுப்பிய ஒலியானது தூக்கத்தை சற்றே சற்றே கலைக்க கண்களை இறுக்கமாக சற்றே மூடி கைகளை முற்றாக விரித்து சோம்பல் முறிக்கவும்,

குஞ்சுகள்! எழும்புங்கோடா பள்ளிக்கூடத்துக்கோ போகோணுமெல்லோ! ” 

என்று அம்மாவின் குரலும் பிஞ்சுகளின் கண்ணிமைகளை சற்றே விரிக்கவும் உதவிற்று.

சாம்பிராணிப்புகையைப் பரப்பிய வண்ணமே அந்த அறையினின்று விலகி மூன்றாவது அறைக்குள் பிரவேசிக்கலானாள் செண்பகம். உச்சரித்த தோத்திரங்களும் மணியோசையும் கடுதியாகவே நின்றிட அறைக்குள் பிரவேசித்த செண்பகத்தின் கண்களில் மாத்திரம் வாழ்வின் முடிவுகளனைத்தும் நிழலாடத்தொடங்கின. நன்றே விரிந்திருந்த விழிகளில் கண்ணீரும் சடுதியாக சொரிய தொடங்கின. தோத்திரம் பாடிய உதடுகள் சற்றே தடுமாறி அலறின. கால்களும் முன்னேறும் வலிமையற்று தவிக்கவே அந்த இடத்திலேயே முழங்காலிட்டு கதறினாள் செண்பகம்.

கண்முன்னே செண்பகத்தின் சேலையில் தொங்கிக்கொண்டிருந்தான் அவள் மூத்த மகன் சுதன். செண்பகத்தின் அலறல் சத்தம் கேட்கவே சோம்பலில் அரைகுறை விழிப்பிலிருந்த மதன், மஞ்சுளா திடுக்கிட்டு சுதனின் அறையை நோக்கி விரைந்து வர அண்ணன் சுதன் தூக்கிலும் அன்னை தரையிலுமாய் கிடந்தனர்.

அண்ணாஅம்மா….அண்ணா…. ……….”

சிறியவள் மஞ்சுளா இருவரின் கோலத்தை கண்டதும் விழுந்து மாறி மாறி இருவரையும் நோக்கி கதற தொடங்கினாள்.
அண்ணனை தூக்கிலும் அன்னையை தரையிலும் கண்ட மதன் கதறிக்கொண்டிருந்த மஞ்சளாவையும் கவனிக்காது உடலியக்கம் நிலைத்தவனாய் அப்படியே இருந்தான். மஞ்சுளாவின் கதறல் சத்தம் வீட்டினில் ஒலித்துக்கொண்டிருந்த சுப்பிரபாதத்தையும் மீறிப்போகவே செண்பகத்தின் வீட்டை அடைந்தனர் அயலவர்கள்.

ஒருபுறம் தூக்கில் சுதன் மறுபுறம் தரையில் செண்பகம் இன்னொருபுறம் இயக்கம் இல்லாதவனாய் மதன் மற்றொருபுறம் கதறியழும் மஞ்சுளா. சுதாகரித்த பக்கத்துவீட்டு பங்கயன் சமயலறைக்கு ஓடிப்போய் நீரை எடுக்க இன்னும் சிலர் மதனையும் மஞ்சுளாவையும் அப்பால் கொண்டு சென்றனர். பக்கத்துவீட்டு குமரேசன் நேரம் தாழ்த்தாது வேகமாய் தொங்கிக்கொண்டிருந்த சுதனின் கையைப்பற்றி நாடித்துடிப்பை சோதித்து சுதன் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினார்.

குவளையில் கொண்டு வந்த பங்கயன் தண்ணீரை செண்பகத்தின் முகத்தில் ஊற்றவே இயக்கமானாள் செண்பகம். தட்டுத்தடுமாறி கண்களைத்திறந்த செண்பகம் சடுதியாக தலையை திருப்பி தொங்கிக்கொண்டிருந்த சுதனை நோக்கி கதறலானாள். பக்கத்திலிருந்த பங்கயன் அண்ணையும் மனைவி பரிமளாவை கடிந்து நோக்கவே ஓடி வந்து செண்பகத்திற்கு துணை நின்று அவளை அப்பாற் கொண்டு செல்ல பங்கயனின் தங்கை சரிதாவும் செண்பகத்திற்கு அருகாமையில் இருக்க ஆடவர்கள் தொங்கிக்கொண்டிருந்த சுதனின் உடலை கீழே இறக்கினார்கள். கூடியிருந்த சனங்களை குமரேசன் அப்புறப்படுத்த கவலை தோய்ந்த பங்கயன் சுதனின் கட்டிலை நோக்கி சென்று அங்கும் இங்குமாய் பார்வையை செலுத்தியபடி இருந்தான். தட்டுத்தடுமாறி அவன் பார்வை சுதனின் கையைக்கவனிக்க அவனின் இடது கை மட்டும் இறுக இருந்தமை அவனுக்கு சந்தேகத்தை எழுப்ப சுதனுக்கு அருகில் சென்று விறைத்திருந்த சுதனின் கைகளை விரிக்க முற்பட கைகளினுள் அடைக்கலமாயிருந்த கடதாசித்துண்டினை கவனிக்கலானான். ஒருவாறாய் அதை வெளியே எடுத்து மடிக்கப்பட்டிருந்த தாளை விரிக்க தன் கைப்பட அதில் எழுதப்பட்டிருந்த வாசகம்

“என் சாவுக்கு நானே காரணம்”. 

நீண்டதொரு பெருமூச்சுடன் எழுதியிருந்த வாசகத்தை வாசித்து முடித்தார் பங்கயன்.

குடும்ப நிலைகளை அறிந்த அயல்வீட்டுக்கார்ர்கள் பங்கயன் குமரேசன் சடங்குகளை தம்செலவில் செய்யத்தொடங்கினார்கள். மற்றவர்களும் செய்தி தெரிந்து வீட்டை அடையத்தொடங்கினர். கூடப்பழகிய நண்பர் குழாம் உறவுகள் அறிந்தவர்கள் என முல்லைபுரத்து வாசிகள் பலரும் செய்திகள் கேட்டு கேட்டு செண்பகத்தின் வீட்டிற்கு வரத்தொடங்கினார்கள். கொட்டில்கள் போடப்பட்டன. கதிரைகள் பாய்கள் என விரிக்கப்பட்டு அதற்குரிய கருமங்களை குமரேசன் மனைவியும் பிள்ளைகளும் பார்க்கத்தொடங்கினர்.

வந்திருந்த அனைவரும் குழுக்கள் குழுக்களாய் இருந்து தகவல்களை பரிமாறத்தொடங்கினர். இத்தனைக்கும் செண்பகம் குடும்பம் முன்னைய காலங்களில் இருந்த்தை விட இப்போது சற்று வசதியாகவே வாழ்ந்து வந்தனர். வறுமை தான் காரணம் என்றும கருதமுடியாது. வந்தவர்களும் எதற்குத்தான் இறந்திருப்பான் என்ற வினாவையே முகத்தில் நிறுத்தியவண்ணம் இருந்தனர். இத்தனைக்கும் சுதன் உயர்தரப்பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப்பெற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவான ஒரு மாணவன்.

யுத்தத்தில் தந்தையையும் ஒரு தம்பியையும் பறிகொடுத்தபோதும் செண்பகத்தின் தளராத அறிவுரைகளை கேட்டும் நிர்க்கதியான தன் குடும்பத்திற்கு தானே பொறுப்பாகவேண்டிய முதல் ஆணாகவும் தன்னை கருதியே உயர்தர பாடங்களை இரண்டாம் தடவையாக வெறியோடு படித்து வெற்றி கண்டவன்.

கைப்பட அவனே தான் தற்கொலைக்கு காரணம் என்று கூறினாலும் வந்திருந்த சமூகமும் நெருங்கியவர்களும் சுதனது தற்கொலைக்கு ஒரு காரணம் இருப்பதாகவே உணர்ந்தார்கள். இன்னும் சிலர் அதையும் தாண்டியதாய் அது கொலையாக இருக்குமோ என்ற விதத்திலும் தமது சந்தேகங்களை வளர்த்தவண்ணம் இருந்தனர்.

யுத்தத்தினால் கணவனையும் ஒரு பிள்ளையையும் இழந்துவிட்டாலும் பின்னைய நாட்களை அவ்விழப்புகளின் மத்தியிலும் சுதன் வளர்ந்தவனாய் பொறுப்புடையவனாய் வீட்டுவேலைகளிலும் உதவி புரிபவனாய் இருந்தமை செண்பகத்தை சற்றே யுத்த வடுக்களில் இருந்து விலக்கியிருந்தது. உயர்தரப்பெறுபேறுகள் கிடைத்து சுதன் பொறியியல் பீடத்திற்கு தெரிவாகிவிட்ட தகவலும் செண்பகத்திற்கு நல்லதொரு திடத்தையே கொடுப்பதாய் அமைந்திருந்தது. அதுவரை கவனிக்காத கிராம வாசிகளும் சுதனின் பொறியியல் பீட தகவலோடு உறவாட தொடங்கினர். வெளியூர்களில் இருக்கும் செண்பகத்தின் தூரத்து உறவுகளும் தற்போது இவர்களை கவனிக்கலாயினர். கண்ணீர் தேங்கிய விழிகள் சுதனை நோக்கியதாயிருக்க நிகழ்வுகள் அனைத்தையும் அசைபோட்டுக்கொண்டிருந்தாள்ஒரு புறம் வாழ்வின் வெறுப்பு மறுபுறம் தன் கடைசி பிள்ளைகள் மதன் மஞ்சுளாவை கரையேற்றும் பொறுப்பும் அவளின் இதயத்தில் ஊசித்துளைகளை ஏற்படுத்தியாய் இருந்துகொண்டிருந்தது. வந்திருந்த கிராம வாசிகளும் மெல்ல மெல்ல ஆறுதல் கூறியே மறையத்தொடங்கினர். கிரியைகளும் கண்ணீரின் துளிகளிலும் அழுகுரல்களின் சங்கமத்திலும் அரங்கேறியது. சடங்குகள் நிறைவடைய உறவுகளும் நாட்கள் கடக்க கடக்க மெல்ல மெல்ல மறையத்தொடங்கினர்.

அத்தனை வலியெடுக்கவும் பலவேறு கனவுகளுடன் சுமந்து பெற்று கணத்திற்கு கணம் அவதானமாய் நல்லது கெட்டதைக்கூறி 20 வருடங்கள் வளர்த்தெடுத்த நினைவுகள் மீண்டும் மீண்டும் செண்பகத்தை தாக்கியவண்ணம் இருந்தன.

உடன்கொள்ளும் கோபம், வெறுப்பு பற்றி தான் சுதனை எச்சரித்த கணங்களும் சிவந்து வீங்கியிருந்த அவளது கண்களில் இருந்து இன்னமும் கண்ணீரை உறிஞ்சி வெளியே எடுத்துக்கொண்டிருந்தன.

வீட்டை நோக்கி ஒரு உருவம் மங்கலாய் வரவே சற்றே முயற்சித்து உற்று நோக்கலானாள். சுதனின் நண்பன் விமலே அது.

வாப்பா விமல்….“ 
தளதளத்த குரல் இன்னும் ஆறாதே இருந்தது. மெல்ல நடந்து செண்பகத்தின் அருகில் அமர்ந்தான் விமல்.

வாப்பா! உங்க கூடத்தானேடா எப்ப பாத்தாலும் திரிவான்! என்னடா பிரச்சின அவனுக்கு

விமலின் விழிகள் தடுமாறின. செண்பகம் கேள்விகளை தொடர்ந்தாள்.

சொல்லு ராசாஏன் அவன் இப்படி செய்தவன். அம்மாட்ட அவன் ஒன்டையும் சொல்லலயேசொல்லு ராசா

மெல்ல மெல்ல விமலின் தலையும் குனியத்தொடங்கியது. விமலின் அசைவுகள் ஒவ்வொன்றும் செண்பகத்திற்கு கவலையிலும் ஒரு தெம்பை அளித்தன. சட்டென்று சுதாகரித்து பலவீகமாகிப்போன உடலிலும் தெம்பை கூட்டி விமலின் தலையை தடவி,

ராசா ராசா சொல்லுப்பா… ! நீ தலய குனியிறதப்பாத்தா உனக்கு அவன் ஏன் போனவனெண்டு தெரியும். ஏன்பா அவன் எங்கள விட்டுட்டுப்போனவன். அரவாசி உயிர் சண்டயோடயே போயிட்டு இதெல்லாம் தெரிஞ்சு ஏனப்பு போனவன் சொல்லுப்பா“ 
வசனங்களை அடுக்கிய வண்ணம் கதற ஆரம்பித்தாள் செண்பகம். விமலும் விழிகள் சொரிய செண்பகத்தை அணைத்துக்கொண்டான்.

இயலுமானவரை தன்னை கட்டுப்படுத்திப்பார்த்தும் செண்பகத்தின் கதறல் அவற்றையெல்லாம் உடைத்துத்தள்ள

எல்லாம் பாழாப்போன காதல் தாம்மாஅதுதான் காரணம்இவன் விரும்புற பிள்ளைக்கு வேற ஒருத்தன பாத்துட்டாங்கள்இவனுக்கு எவ்வளவோ ஆறுதல் சொன்னனான். சனியன் எல்லாரயும் ஏமாத்திட்டுப்போட்டான்” 

கோபம் கலந்த வார்த்தைகள் செண்பகத்தின் செவிகளில் இடிகளாய் இறங்கியது.
விமலை சற்றே தள்ளி சுவரோரம் தலையை சாய்த்தாள். அர்ப்பரித்த உணர்வுகளும் மெல்ல மெல்ல அடங்கத்தொடங்கின.

இதுக்காடா எங்கள விட்டுட்டுப்போனவன் 

குரலும் சற்றே பலமிழந்து போகத்தொடங்கியது. விழிகளும் தன் பங்கிற்கு கண்ணீரை சொரியை எத்தனிக்கின்றன. கண்ணீரும் விழிகளை தாண்டுவதாயில்லை.
விமல் கூறுபவற்றுக்கு பதிலளிக்காதவளாய் சாய்த்த தலையை மீட்காது தெம்பிழந்தவளாய் கிடந்தாள்.
சில நிமிடங்கள் கழித்து,

தம்பி நீ போப்பாஇருட்டாகுது. போ…. போ…” 

வலுக்கட்டாயமாக விமலையும் அனுப்பினாள். தலையையும் சுவருடன் சாய்த்துக்கொண்டு மீண்டும் அதே அமைதி.
தனக்கென்று இருந்த ஒரு பொறுப்பான, குடும்ப சுமைகளை சூழ்நிலைகளை அறிந்தவன் பொறுப்பில்லாதே போய்விட்டானே என்று ஏங்கலானாள். கண்களும் சிவத்தன.
உடன்கொள்ளும் கோபம், அடிக்கடி உணர்ச்சிவசப்படும் போதெல்லாம் பலமுறை கண்டித்தும் கடைசியில் நிதானமிழந்து இறந்துவிட்டதை எண்ணவும் கண்களில் கண்ணீர் துளிகள் மெல்ல மெல்ல சுரக்க ஆரம்பித்தன. கதிரவனும் மெல்ல மெல்ல மறைய வீட்டினையும் சட்டென்றே இருளும் சூழத்தொடங்கியது அவளின் வாழ்க்கையை சூழ்ந்தது போலவே.

ததும்பிய உதடுகள் சற்றே சுதனை கடிந்து பேசவும் அழுகையும் மெல்ல அவளை நாடத்தொடங்கியது. கறுத்த மேக்க்கூட்டங்களுக்கு இடையிலும் ஆங்காங்கே சில மின்னல் கீற்றுகளும் இடிமுழக்கங்களும் இவளது ஆதங்கங்களுக்கு செவி சாய்ப்பதாகவே இருந்தன.

வாழ்வின் ஒவ்வொரு தோல்வியையும் உணர்வுகளின் உச்சங்களுக்கு இரையாக்கி விடாதீர்கள். இங்கே இரையாகியது சுதனின் வாழ்வு மட்டுமல்ல. அவனது தாய், தம்பி, தங்கையின் கனவும் கூட. ஒவ்வொரு மானிடனிடமும் குறைந்தது இன்னும் ஒருவரின் கனவுகளாவது தங்கியிருக்கும்.

Comments

Popular posts from this blog

காலத்துடனான ஓர் பயணம் 03 ( யார் ? இவர்கள் 10 )

நாம் இயங்குவதால் இறந்தகாலத்தை அடைவோமா? ஒருவர் ஏதாவது இயக்கத்தில் இருக்கும் போதே அவர் மற்றவர்களை விட காலத்தால் மெதுவாகிறார். ஆனால் இந்தக்கால வித்தியாசம் மிக மிக குறைந்ததாக இருக்கும். அதாவது எம்மால் உணர்ந்து கொள்வது கடினமானது. காரணம் அவரின் வேகம் ஒளியின் வேகத்துடன் ஒப்பிடுகையில் மிக மிகக்குறைவானதாகும். உதாரணமாக நாம் ஒரு சைக்கிளில் இயங்கினால் கூட எமக்கு நேரம் மெதுவாகவே இருக்கும். ஆனால் அந்த நேரம் மிகவும் குறைவானது. எனவே அதைப்பரீட்சித்துப்பார்க்கவேண்டும் எனில் மிக மிக மிக ............................... குறைந்த நேரங்களையும் அளவிடக்கூடிய கடிகாரம் வேண்டும்.              அல்லாது விடில் நாம் இயங்கும் வாகனங்களின் கதியை மிகவும் அதிகரித்தால் அந்த நேரவித்தியாசத்தை உணரமுடியும். அதாவது ஒருவர் அவ்வாறு உயர்வேகத்தில் இயங்கினால் அவ்வாறு இயங்குபவர் மற்றவர் கண்களுக்கு புலப்படாமல் போவார். ஏனெனில் அவர் மற்றவர்களை விட காலத்தால் மெதுவானவர். நாம் ஒளியின் வேகத்துடன் ஒப்பிடக்கூடிய வகையிலான வேகமுடைய வாகனங்களில் இயங்குவோமாயின் இந்த மாற்றத்தை உணரமுடியும். அதாவது இயங்குகின்ற எமக்கு காலத்தில் ஏற்படும் மாற்ற

“ Hague Rules, Hague-Visby and Hamburg Rules” Carrier Friendly or Shipper Friendly?

INTRODUCTION In ancient times, ship owners had extensive powers over the shippers and cargo owners. Ship owners managed to escape their liabilities by using these powers and the principle of freedom of contract during cargo damages. Therefore, The cargo owners were disappointed and the reliability of bills of lading was greatly affected. [1] This was the main reason to develop the Hague Rules 1924. Most of the maritime nations ratified Hague rules and still this is in force. These rules apportioned responsibility for the safe delivery of the cargo between shipper, carrier and receiver and denied these parties, particularly the carrier, and the ability to contract out minimum levels of responsibilities.    The international traders were under impression that Hague rules are more ship owner friendly and therefore, in 1968 amendments to the Hague rules were brought up and these are known as Hague-Visby rules. [2] Again, in response to shipper’s complaints that the Hague-V